திருச்சி மாவட்டம், மணப்பாறை திருக்குறள் பயிற்றகத்தில் 41-ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருக்குறள் முற்றோதுதலுடன் விழா தொடங்கியது. திருக்குறள் பயிற்றகத்தின் நிறுவனரும், திருக்குறள் புலவருமான நாவை. சிவம் தலைமையில் பிற்பகலில் விரைந்துபாடும் வெண்பா போட்டி மற்றும் மொழி, இன, நாட்டுச் சிந்தனைப் பாவரங்கம் ஆகியவை நடைபெற்றது.
மாலையில் திருவள்ளுவர் திருவுருவப்படம் ஏந்திய வாகனம் திருவீதி உலா சென்றது. ஊர்வலம் மங்கல இசையுடன், சடையார்கோயில் நாராயணசாமி குழுவின் சிறுவர் சிறுமிகளின் கோலாட்டத்துடன் பேருந்து நிலையம் பெரியார் சிலை திடலில் தொடங்கி முச்சந்திகளில் முப்பால் முழக்கமிட்டு கச்சேரி ரோடு, காமராசர் சிலை, விராலிமலை சாலை வழியாக நிகழ்ச்சி மண்டபத்தை அடைந்தது. அதன்பின் மண்டபத்தில் தமிழிய குறளிய எழுச்சி அரங்கம் பாவேந்தர் போற்றும் வள்ளுவர் என்ற பொருளில் பாவலர். எழில்வாணனும், பாவலரேறு போற்றும் வள்ளுவம் என்ற பொருளில் முனைவர் கடவூர் மணிமாறன், ஆண்டுச் சிந்தைனகள் என்ற பொருளில் தென்மொழி இதழ் ஆசிரியர் முனைவர் மா. பூங்குன்றன் ஆகியோர் பேசினர். பின் திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. கவிஞர் த. இந்திரஜித், மணவை தமிழ் மாணிக்கம், துரை. காசிநாதன், சூர்யா சுப்பிரமணியன், சிவ. தமிழ்கதிரவன், தாமரை சிவம், சிவ. தளபதி தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.