திருச்சியில் தகராறை விலக்கிவிட்ட தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய மீன்வியாபாரியைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் ஹரிஹரன் (40). இவர், திங்கள்கிழமை மதியம் உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது மீன் வியாபாரியான உக்கடை பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மருந்துக் கடையில் குடிபோதையில் தகராறு செய்வதாகத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஹரிஹரன் அங்கு சென்றபோது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது இஸ்மாயில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஹரிஹரனை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதி பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த காவல் துறை உயர்அதிகாரிகள் சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.
தப்பியோடிய இஸ்மாயிலைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.