ஸ்ரீரங்கத்தில் குடும்பத் தகராறில் செவ்வாய்க்கிழமை மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்ற கணவரைப் போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த முத்துகோபால் மகள் சாந்தி (28). இவருக்கும், பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் முருகன் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதில் மனமுடைந்த சாந்தி கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார்.
மேலும் தனக்கு விவகாரத்து கோரியும் உள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீரங்கம் வந்து சாந்தியிடம் உள்ள தனது குழந்தையைக் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் மறுத்துள்ளார். அப்போது தான் மறைத்து கொண்டுவந்த பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து சாந்தி மீது வீசியதில், அந்த பெட்ரோல் பாட்டில் சாந்தி மீது படாமல் கீழே விழுந்து உடைந்து தீப்பற்றியது. இதையடுத்து, சக்திவேல் முருகன் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் முருகனை புதன்கிழமை காலை கைது செய்தனர்.