மக்களவைத் தேர்தலையொட்டி திருச்சியில் பறக்கும்படையினர் சனிக்கிழமை நடத்திய வாகன சோதனையில் 1,800 பித்தளை செம்புகள், 500 கடல் சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி குடமுருட்டி சாலையில் உள்ள சோதனைச் சாவடியில், வட்டாட்சியர் மோகனா தலைமையிலான பறக்கும்படையினர் மற்றும் போலீஸார் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவையிலிருந்த வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரின் பின் இருக்கையில் இருந்த மூட்டைகளில் 1,800 பித்தளை செம்புகளும், 500 கடல் சங்குகளும் இருந்தன. ஆனால், இவை எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பதற்கான ஆவணங்களும் எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்களும் இல்லை. குலதெய்வ வழிபாடு பூஜைக்காக ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு செல்வதாக காரில் வந்தவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அவற்றை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.