திருச்சி மாவட்டம், குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிப் 21 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. காலை 8 மணி முதல் பால்காவடி சுமந்து வந்து வழிபாடும், இரவு 9 மணிக்கு அருள்மிகு சிங்காரவேலர் வெள்ளிமயில் வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.
பிப் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு தினைப்புனம்காத்தல் விழாவும், பிப் 24 ஆம் தேதி முருகப் பெருமான் வேடனாகவும், விருத்தனாகவும் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து யானை விரட்டல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய மற்றும் நிறைவு நிகழ்ச்சியாக பிப் 25 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வள்ளித்திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அ.ர.சுதர்சன், உதவி ஆணையர் ப. ராணி, திருக்கோயில் நிரவாக அதிகாரி வி.சுரேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.