மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியை துணை ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட் டனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாகவும், தமிழகத்தில் ஏப்.18 ஆம் தேதி ஒரே கட்டமாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பறக்கும்படையினர் வாகனச் சோதனை மேற்கொண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பொருள்கள், பணம் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் அளிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டவை திரும்பி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக பல்வேறு இடங்களில் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் : தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு உள்ளூர் காவல்துறையினர் மட்டுமல்லாது, துணை ராணுவத்தினரும் கோரப்பட்டிருந்தனர். அதன்படி,உத்தரப்பிரதேச மாநிலம், பைசாபாத்திலிருந்து சனிக்கிழமை இரவு இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்புப் படையினர் ( துணை ராணுவத்தினர்) திருச்சி வந்தனர்.
உதவி ஆணையர் ரமேஷ்சந்த் தலைமையில் திருச்சி வந்த 84 துணை ராணுவ வீரர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திருச்சி மாநகரில் டிவிஎஸ் டோல்கேட், அரிஸ்டோ
ரவுண்டானா, பொன்னகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, மக்களுக்கு பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை அளிக்கும் வகையில் அணிவகுப்பு ஊர்வலத்தையும் விரைவில் நடத்த உள்ளனர்.