குழந்தைகளிடம் பிறருக்கு கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதால் சமூக உறவு மேம்படும் என்றார்திருச்சி ஆத்மா மனநல ஆலோசகர் ரன்தீப் ராஜ்குமார்.
துறையூர் சௌடாம்பிகா கல்விக் குழுமத்திலுள்ள எஸ்ஆர்எம் சிபிஎஸ்இ பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற மழலையர் பிரிவு ஆண்டு விழாவில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது:
ஒரு குழந்தையின் நல்ல வளர்ச்சியை பெற்றோர்களும், அவர்கள் வளருகிற சூழலும் தீர்மானிக்கிறது. மற்றவர்களோடு ஒப்பிடுதல்,திட்டுதல், அடித்தல் காரணமாக எதிர்மறையான மனநிலையில் குழந்தைகள் வளரும்.படிக்கும்போது மூளையின் இடதுபகுதி வேலை செய்கிறது. ஆனால், வலதுபகுதி மூளையின் செயல்பாடு வளரும் குழந்தைக்கு அவசியமானது. அதட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் சண்டையிடும் மன நிலையிலும், எதிலும் ஆர்வம் காட்டாத குழந்தைகளின் திறனை அங்கீகரிக்காத பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கை குறைவாகவும், ஊக்குவிக்கும் சூழலில் வளரும் குழந்தைகள் விட்டுக்கொடுக்கிற சவாலை எதிர்கொள்கிற, பிறரை அனுசரித்து செல்கிற, மிகுந்த தன்னம்பிக்கையுடனும், நட்புணர்வுடன் வளர்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் நன்கு உறங்காமல், சாப்பிடாமல், வகுப்பறை நிகழ்வுகளை கவனிக்காமல் கற்றலில் குறையோடு இருப்பார்கள். தன்மானம், சுயமரியாதையுடன் குழந்தைகள் வளர பெரியவர்கள் குழந்தைகளிடம் அன்பாக இருக்கவேண்டும் என்றார் அவர். தொடர்ந்து யூகேஜி மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.