ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை -மும்பை ஆட்டத்தை திருச்சி தேசிய கல்லூரியில் பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களிடம் பிசிசிஐ பிரதிநிதி இர்பான் தாதல், திங்கள்கிழமை கூறியது: கடந்த 2015ம் ஆண்டு முதல் விவோ, ஐபிஎல் ரசிகர்கள் குழாம் இணைந்து இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை 21 மாநிலங்கள், 36 நகரங்களில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்படுகிறது.
இந்தாண்டு தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி தேசிய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ( மே 7) நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதும் ஆட்டத்தை காண பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 8 ஆயிரம் பேர் அமர்ந்து ஆட்டத்தைக் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனுமதி இலவசம். போட்டி நடைபெறும் மைதானத்தில் அமர்ந்து ரசிப்பதை போன்ற தோற்றத்தை ரசிகர்களுக்கு கிடைக்கச் செய்ய இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர். பேட்டியின்போது, திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் குமார் உடனிருந்தார்.