திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொன்மலை தங்கேசுவரி நகரைச் சேர்ந்த ரயில்வே பணியாளர் ஜான்பிரிட்டோ. இவரது மனைவி அனிதாமரியா (45). இவர், திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலையிலிருந்து டிவிஎஸ் டோல்கேட் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பொன்மலை குடியிருப்புப் பகுதியில் வந்த போது, சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை காரணமாக இருசக்கர வாகனத்தை மெதுவாக இயக்கினார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அனிதாமரியா அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பொன்மலை போலீஸார் வழக்குப்பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.