திருச்சி பொன்மலை பகுதியில் ரூ. 5.13 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதை பணிகள் தீவிரமடைந்துள்ளது.
திருச்சி பொன்மலை பகுதியில் வடக்கு டி (நார்த் - டி) பகுதியில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. இப்பகுதியில் சென்னை மற்றும் தஞ்சை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அடிக்கடி செல்வதையடுத்து கேட் மூடப்படுவதால், பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் நார்த் டி கேட் பகுதியில் ரூ. 5.13 கோடியில், சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 16 சதுர வடிவிலான கான்கிரீட் சுவர்கொண்டு 25 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
இதற்காக ரயில் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறு இல்லாமல் ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சுரங்கப் பணியை கோடை விடுமுறைக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இப்பணி நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சென்றுவர மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.