காஜாபேட்டையில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோத செயல்களைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகர் பகுதி காஜாபேட்டை அரச மரத்தடி அருகே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சிறுவர்கள் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சமூக விரோதச் செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின.
இதைத் தொடர்ந்து போதைப் பொருள் விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை அப்பகுதி மக்கள் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் அளித்த உறுதியைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.