சென்னையில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பதக்கம் பெற்றோருக்கு , திருச்சியில் சனிக்கிழமை நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆகஸ்ட் 30,31, செப்டம்பர் 1 தேதிகளில் தமிழ்நாடு ஜூனியர் பிரிவு தடகளப் போட்டிகள் ( மாவட்டங்களுக்கு இடையிலான) சென்னையில் நடைபெற்றன. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதக்கம் வென்றனர். இவர்களைப் பாராட்டும் வகையில், அண்ணா விளையாட்டரங்கத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவுக்கு திருச்சி தடகளச் சங்கச் செயலர் டி.ராஜு தலைமை வகித்தார்.பொருளாளர் ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் ( குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆ. மயில்வாகனன் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பதக்கம் பெற்ற வீரர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
திருச்சி மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் லாசர், சுதா ரவிசங்கர், தடகளப் பயிற்சியாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.