திருச்சி அருகே ஆம்னி பேருந்து மோதி காவலாளி உயிரிழந்தது குறித்து துவாக்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், நரியம்பட்டியைச் சேர்ந்தவர் நாராயணசாமி(70). இவர் துவாக்குடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பெங்களூரூவிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து நராயணசாமி மீது மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து ஆம்னி பேருந்து ஓட்டுநரான குளித்தலையைச் சேர்ந்த அண்ணாதுரையைக் கைது செய்தனர்.