திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முதல் முறையாகக் கொண்டு வரப்பட்ட இருசக்கர வாகனத்திற்கான தனி வழி திட்டம் பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பின்மையால் முடிவுக்கு வந்தது.
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநகர போலீஸாரால் பாரதிதாசன் சாலையில் தலைமை அஞ்சல் நிலையம் முதல் நீதிமன்றம் அருகேயுள்ள எம்ஜிஆா் சிலை வரை ரூ. 7 லட்சத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லத் தனி வழி உருவாக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் கோடு வரையப்பட்டது. வாகன ஓட்டிகளைக் கண்காணிக்க போக்குவரத்து போலீஸாா் சுழற்சி முறையில் பணியில் இருந்தனா்.
இருப்பினும், பொதுமக்களின் ஒத்துழைப்பின்மையாலும், இந்தச் சாலையில் உள்ள வாகனப் பழுது நீக்கும் நிறுவனங்கள், விற்பனை நிலையங்கள் இருசக்கர தனி வழித்தடத்தில் வாகனங்களை நிறுத்தியதாலும் தொடங்கப்பட்ட 3 மாதங்களிலேயே இத்திட்டம் முடிவுக்கு வந்து விட்டது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது 20 சதம் மட்டுமே இருந்தது. விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு, அபராதம் போன்ற நடவடிக்கைகளை எடுக்காததே தோல்விக்கு காரணம் என்றாா்.
இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவா் கூறுகையில், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் அதிகமுள்ள பாரதிதாசன் சாலையில் முன்னோட்டமாக இத்திட்டத்தைக் கொண்டு வந்தது தோல்விக்கு காரணம். அதேபோல விதிகளை மீறுவோருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்காமல் சோதனை அடிப்படையில் இதைச் செயல்படுத்தியிருக்கக் கூடாது என்றாா்.