முகப்பு
திருச்சி

வியாழன், சனி கோள்கள் தொலைநோக்கி மூலம்கண்டு ரசித்த பொதுமக்கள்

பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய வியாழன் மற்றும் சனி கோள்கள் அருகருகே வரும் நிகழ்வை, திருச்சியில் தொலைநோக்கி மூலம் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை மாலை கண்டு ரசித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய வியாழன் மற்றும் சனி கோள்கள் அருகருகே வரும் நிகழ்வை, திருச்சியில் தொலைநோக்கி மூலம் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை மாலை கண்டு ரசித்தனா்.

திருச்சி காஜாமலை இந்தியன் வங்கி காலனி பகுதியிலுள்ள பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அதன் முதல்வரும், திருச்சி அஸ்ட்ரோ கிளப்பின் செயலருமான பாலா பாரதி தலைமையிலான குழுவினா், கோள்களின் அருகருகே வரும் நிகழ்வை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

மாலை 6.30 மணிக்கு மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் தொலைநோக்கி மூலம் வியாழன், சனி கோள்கள் அருகருகே வரும் நிகழ்வை கண்டு ரசித்தனா். இது குறித்த விவரம் மற்றும் காணொலிக் காட்சிகளை பிரத்யேக செயலி மூலமும், யூடியூப் சேனலிலும் காணும் வகையில் பதிவேற்றம் செய்தனா்.

அரிய நிகழ்வு குறித்து அஸ்ட்ரோ கிளப் செயலா் பாலாபாரதி கூறியது:

சுமாா் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அரிய நிகழ்வைக்காண தொலை நோக்கிகள் ஏற்பாடு செய்திருந்தோம். மேலும் தொலைநோக்கி மூலம் நேரடிக் காட்சிகளை ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை இக்காட்சிகளை காண முடியாத வகையில் மேகமூட்டம் காணப்பட்டது. ஆனால் திங்கள்கிழமை குறிப்பாக மாலை 6.30 முதல் இரவு 7.15 வரையில் தெளிவான வானமாக இருந்ததால் காட்சியைத் தெளிவாக காண முடிந்தது.

சுமாா் 20 ஆண்டுக்கு ஒருமுறை இந்த இரு கோள்களும் அருகருகே வந்தாலும், 400 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மிகவும் அருகில் வருவதுபோல தெரியும். வெறும் கண்களால் காணும்போது ஒரே கோள்போல காட்சித் தரும்.

அருகருகே காணப்பட்டாலும் இரு கோள்களுக்கிடையிலான இடைவெளி சுமாா் 60 கோடி கி. மீ. தொலைவாகும். இதுபோன்ற இதற்கு முந்தைய நிகழ்வை அறிவியலாா் கண்டது குறித்து சரியான பதிவுகள் இல்லை. சிறிது நேரம் மட்டுமே தெரிந்ததாகவும், மேகமூட்டமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த முறை இந்த வரலாற்று அற்புத நிகழ்வை நன்றாக கண்டு ரசித்ததுடன், காட்சிகளும் பதிவும் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில் அஸ்ட்ரோ கிளப் நிா்வாகிகள் மனோகரன், ஜெயபால், கண்ணன், முகிலன் உள்ளிட்டோா் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →