வைபவ் சூர்யவன்ஷிக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கக் கூடாது: ரியான் பராக்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அவரது இயல்பான ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் விளையாட அனுமதிக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அவரது இயல்பான ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் விளையாட அனுமதிக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. வருகிற மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியான ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடுகிறது. மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி எந்தவொரு கூடுதல் அழுத்தமுமின்றி மகிழ்ச்சியுடன் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: ஒரு கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நிறைய பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்க வேண்டாம் எனவும் அல்லது நிறைய ஊடக செய்திகளை பின் தொடர வேண்டாம் எனவும் கூறுவேன். அவர் எந்தவொரு அழுத்தமுன்றி மகிழ்ச்சியுடன் விளையாடட்டும். வைபவ் சூர்யவன்ஷியின் மேலாளரையோ அல்லது வேறு யாரேனும் ஒருவரையோ ஊடகங்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு 14-15 வயதுதான் ஆகிறது. அவர் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடட்டும். அவர் மிகவும் நன்றாக விளையாடுகிறார். அவர் நாட்டுக்கு பெருமை சேர்க்கப் போகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்போது, அழுத்தம் இருக்கும். ஆனால், அழுத்தத்தை ஜெய்ஸ்வால் திறம்பட கையாண்டு சூர்யவன்ஷிக்கு உதவுவார். எந்த ஒரு அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாமல், சூர்யவன்ஷி அவரது இயல்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவருக்கு என்னுடைய ஆலோசனையாக இருக்கும் என்றார்.