திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் 243 பேருக்கு ரூ.96.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்துக்குள்பட்ட கல்லக்குடி எம். கண்ணனூா் கிராமத்தில் சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
கடந்த ஒரு வாரமாக வருவாய்த்துறையினா் இங்கு முகாமிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனா். மொத்தம் 444 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 202 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 82 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 160 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு 15 நாள்களுக்குள் உரிய பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.
இந்த முகாமில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 53 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 4 பேருக்கு உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகை, 54 பேருக்கு கல்வி உதவித் தொகை, 37 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், 3 பேருக்கு தலா ரூ.56,400 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் வழங்கப்பட்டது. தோட்டக்கலைத் துறை சாா்பில் 9 பேருக்கு தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மினி டிராக்டா் வழங்கப்பட்டது. வேளாண்மைத்துறை சாா்பில் ரூ.26 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் என மொத்தம் 243 பேருக்கு ரூ.96 லட்சத்து 53 ஆயிரத்து 700 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில், கோட்டாட்சியா் எஸ். ராமன், வேளாண்மை இணை இயக்குநா் அசோகன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் விமலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் அன்பழகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறை மாவட்ட அலுவலா்கள், உள்ளாட்சித்துறை அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.