துறையூர் நகரில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டிலிருந்து விடியற்காலையில் துர்நாற்றத்துடன் வந்த புகை வெளியேறியது. தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் அந்த வீட்டை திறந்து போது மூதாட்டி கருகி சடலமாக கிடந்தார். இதனைக் கண்ட அண்டை வீட்டார்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
துறையூர் தியாகி சங்கர லிங்கனார் தெருவில் உள்ள ஒரு சந்தில் வசிப்பவர் கண்ணன் மனைவி மகேஸ்வரி(65). இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவருடைய மகள் துறையூரில் வேறொரு பகுதியில் வசிக்கிறார். மகன் லால்குடி அருகே ரெட்டிமாங்குடியில் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியாக வசித்து வந்த மகேஸ்வரியின் வீட்டில் இன்று( திங்கள்கிழமை) காலை 6.30 மணியளவில் புகையுடன் துர்நாற்றம் நெடி வீசியுள்ளது.
இதனைக் கவனித்த அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் துறையூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு பணியாளர்கள் வீட்டுக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதன் பின்னர் உள் தாழிடப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் சமைக்கிற பகுதியில் மகேஸ்வரி சடலமாக கிடந்தார். அவருடைய செல்லிடப்பேசி, உடைகள் எரிந்து போயிருந்தது.
சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் சேதமில்லை. இந்த நிலையில் மகேஸ்வரியின் மரணம் குறித்து துறையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மூதாட்டியின் சடலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அண்டைவீட்டார்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.