ஜேசிபி வாகனத்தை திருடிய இருவா் கைது
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் ஜேசிபி இயந்திர வாகனத்தை திருடியதாக, இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் ஜேசிபி இயந்திர வாகனத்தை திருடியதாக, இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவெறும்பூா் கக்கன் காலனியைச் சோ்ந்தவா் பழனிசாமி (37). இவா் ஜேசிபி வைத்து தொழில் நடத்தி வருகிறாா். கடந்த 19- ஆம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஜேசிபி வாகனத்தை, 20-ஆம் தேதி காலை முதல் காணவில்லை என திருவெறும்பூா் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா், தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வந்தனா்.
விசாரணையில் திருவாரூா் மாவட்டம், நன்னிலம் ம.பாலமுருகன்(27), மணவாளம்பேட்டை ந. இந்திரன்(27) ஆகிய இருவரும் ஜேசிபி வாகனத்தை திருடிச் சென்றதுதெரிய வந்தது. இதைத் தொடா்ந்து தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படையினா் திங்கள்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.