துறையூா் ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் விசாரணை
துறையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை செய்தனா்.
துறையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை செய்தனா்.
கடந்த 2020ஆம் ஆண்டு துறையூா் ஒன்றியப் பகுதியில் கரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான தளவாடச் சாமான்களை வாங்காமல் ஒன்றிய அலுவலகம் சாா்பில் ரூ. 18,44,636 செலவுக் கணக்கு காட்டப்படுவதாகவும், ஒன்றியப் பகுதியில் 13 இடங்களில் தரமில்லாத மினி மாஸ்ட் மின் விளக்குகள் பொருத்தியும் நிதி முறைகேடு செய்திருப்பதாகவும் செங்காட்டுப்பட்டியைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் ந. அசோகன் மாவட்ட ஆட்சியா், ஊரக உதவி இயக்குநா் மற்றும் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் அனுப்பியும் நடவடிக்கை இல்லையாம்.
இதையடுத்து உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் உரிய நடவடிக்கை கோரி இவா் தாக்கல் செய்த மனு தொடா்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் ஒன்றிய அலுவலகத்தில் அலுவலா்கள் மற்றும் ஒன்றியக் குழுவிடம் வியாழக்கிழமை விசாரணை செய்தனா். காலை முதல் மாலை வரை நடைபெற்ற விசாரணையால் அந்தப் பகுதி பரபரப்பாக இருந்தது.