த்ரிஷ்யம் - 3 வெளியீடு தள்ளிப்போகிறதா?
மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் - 3 படத்தின் வெளியீடு தள்ளிப்போவது பற்றி...
த்ரிஷ்யம் - 3 படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஜீத்து ஜோசப் - நடிகர் மோகன்லால் கூட்டணியில் உருவான த்ரிஷ்யம், த்ரிஷ்யம் - 2 திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
த்ரில்லர் பாணியில் உருவாகி மலையாளத் திரையுலகில் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படங்கள் வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றன.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் இப்படத்தின் மூன்றாவது பாகமான ‘த்ரிஷ்யம் - 3’ உருவாகியுள்ளது. இதனை, ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வருகிற ஏப்ரல் 2 அன்று பான் இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
ஆனால், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக த்ரிஷ்யம் - 3 வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத் திரைப்படங்களுக்கு வணிகரீதியாக வளைகுடா நாடுகளில் நல்ல வியாபாரம் உள்ள நிலையில் தற்போது படத்தை வெளியிட்டால் அங்கு வணிகம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால் பட வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் உறுதி செய்யப்பட்ட வெளியீட்டுத் தேதி பற்றிய தகவல்களை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளனர்.