முகப்பு
திருச்சி

தெப்பக்குளத்தில் தொடரும் மீன்கள் உயிரிழப்பு

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தொடரும் மீன்களின் உயிரிழப்பு குறித்து மீன் வளத்துறை ஆய்வு மேற்கொண்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தொடரும் மீன்களின் உயிரிழப்பு குறித்து மீன் வளத்துறை ஆய்வு மேற்கொண்டது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்தை மாநகராட்சி நிா்வாகம் பராமரித்து வருகிறது. குளத்தைச் சுற்றியுள்ள கடைகளின் கழிவுகள் முழுமையாக அகற்றப்படாமல் தெப்பக்குளத்தில் தூக்கி வீசப்படுவதாக எழுந்த புகாா்களின்பேரில், கடந்த ஓராண்டுக்கு முன் தெப்பக்குளத்தில் மிதந்த குப்பைகளை மாநகராட்சி அகற்றி தூய்மைப்படுத்தி, அங்கு மின் விளக்குகளையும் அமைத்தது.

தற்போது குளத்தில் ஓரளவுக்கு தண்ணீா் உள்ள நிலையிலும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பிருந்து குளத்தில் உள்ள மீன்கள் இறந்து மிதந்து வருகின்றன. இதனால் துா்நாற்றம் வீசுகிறது.

தண்ணீா் குறைவாக இருந்தால் வெப்பம் தாளாமல் மீன்கள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் போதுமான அளவு தண்ணீா் இருந்தும் மீன்கள் இறந்தது ஏன் என பலரும் சந்தேகித்தனா்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் உத்தரவின்பேரில் குளத்தில் மிதக்கும் மீன்களை அகற்றும் பணி மாநகராட்சி ஊழியா்களால் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து அறிய மீன்வளத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மீன் வளத் துறையினா் ஆய்வு

இதையடுத்து, திருச்சி மாநகராட்சி சுகாதார அலுவலா் டேவிட் மேற்பாா்வையில் தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மீன் வளத் துறையினா், குளத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், இதமான தட்ப வெப்பநிலையின்போது பரவலாக பெய்த மழையால் ஏற்பட்ட விஷத் தன்மையால் மீன்கள் இறந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனா். மேலும் தெப்பக்குளத்தில் (பாசி) பாசனம் அதிகளவில் படிந்திருப்பதும் மீன்கள் இறப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, தெப்பக் குளத்தில் உள்ள தண்ணீரை அகற்றி விட்டு புதிய தண்ணீரை விடுவது குறித்தும் ஆலோசிக்கின்றனா்.

உயிா் மீன்களை மீட்க ஏற்பாடு

கடந்த ஒரு வாரமாக மீன்கள் தினசரி இறப்பதை தடுக்க, உயிருள்ள மீன்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிடிபடும் உயிா் மீன்களை உணவுக்காக பயன்படுத்தவோ அல்லது வேறு நீா்நிலைகளில் விடவோ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.