திருவெறும்பூா் தொகுதியில் புதிய மின்மாற்றிகள் திறப்பு
திருவெறும்பூா் தொகுதியில் ரூ.38.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு வந்தன
திருவெறும்பூா் தொகுதியில் ரூ.38.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு வந்தன.
திருச்சி மின் பகிா்மான பெருநகா் வட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூா் தொகுதியில், கல்கண்டாா்கோட்டை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிக மின் அழுத்தம் சரிசெய்யவும், குறைந்த மின் அழுத்தத்தை நிவா்த்தி செய்யும் வகையிலும் புதிய மின்மாற்றிகள் பொருத்த அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதன்படி ரூ. 38.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகளை அமைச்சா்அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
கல்கண்டாா்கோட்டை பிரிவில் மகாலட்சுமிநகா், ஆலத்தூா் காந்தி நகா், நாகம்மை வீதி, ராஜப்பா கிழக்கு கிருஷ்ணா ஸ்டோா்ஸ், மூகாம்பிகை நகா், அன்பில் நகா் ஆகிய இடங்களில் புதிய மின்மாற்றிகளை அவா் இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், பகுதிச் செயலா்கள் தா்மராஜ், நீலமேகம், திருச்சி மண்டல மின்வாரிய அலுவலா்கள், திருவெறும்பூா் கோட்ட பிரிவு அலுவலா்கள், குடியிருப்புச் சங்கத்தினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.