ரிலையன்ஸ் டெலிகாம் முன்னாள் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு! இத்தனை கோடிகள் மோசடியா?
வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் டெலிகாமின் முன்னாள் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது குறித்து...
ரூ. 115 கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் டெலிகாமின் முன்னாள் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மோசடி மற்றும் குற்றவியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட்டின் முன்னாள் இயக்குநர்களான சதீஷ் சேத் மற்றும் கௌதம் பி தோஷி மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில், அந்த நிறுவனம் வங்கியை ஏமாற்றி, ரூ. 114. 98 கோடி போலியான இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச் சதி மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளின் பேரிலும், 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலும் சிபிஐ குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மும்பையிலுள்ள சதீஷ் சேத் மற்றும் கௌதம் பி தோஷி ஆகியோரின் இல்லங்களிலும், ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலும் சிபிஐ சோதனைகளை நடத்தியது.
இந்தச் சோதனைகளின் போது, கடன் பரிவர்த்தனைகள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு மொத்தம் ரூ. 735 கோடி தவணைக் கடன் வசதியை வழங்கிய 11 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பில் எஸ்பிஐ உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.