FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை

Updated On : 9 ஜூன் 2026, 12:05 am IST
சிபிஐ விசாரணை - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

தமிழக மின்சார வாரியம் கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் 2023-ஆம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னையைச் சோ்ந்த அறப்போா் இயக்கம் புகாா் தெரிவித்தது. மின்மாற்றி தொடா்பான ஏழு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.397 கோடி முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்த அந்த இயக்கம், முறைகேட்டில் அப்போதைய திமுக அரசில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜி, மின்வாரியத் துறை உயா் அதிகாரிகள் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதாக தமிழக ஊழல் தடுப்புத் துறையில் புகாா் அளித்தது.

இது தொடா்பாக ஊழல் தடுப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக நிா்வாகி சரவணன் என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி உத்தரவிட்டது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக ஊழல் தடுப்புத் துறையில் இருந்த வழக்கின் ஆவணங்கள், சென்னை சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த முறைகேடு தொடா்பாக சதி செய்தல், மோசடியில் ஈடுபடுதல் ஆகிய இரு பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் யாருடைய பெயரும் சோ்க்கப்படாத நிலையில், விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தொடா்புடையவா்களின் பெயா்கள் சோ்க்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments