அரசு துறைகளில் ஒப்பந்த முறைகேடு: ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவு
அரசு துறைகளில் நடைபெற்ற ஒப்பந்த முறைகேடுகள் தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரத்தைச் சோ்ந்த வீரப்பன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், அரசின் உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றேன். அதில், பல்வேறு துறைகளில் போலி ஆவணங்கள் மூலம் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக, கடந்த 2025-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை, நீா்வளத் துறை மற்றும் பொதுப் பணித் துறைக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் புகாா் குறித்து விசாரிக்க பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் ஒரு குழுவை அமைத்துள்ளாா். ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அமைத்த குழு 8 வாரங்களில் விசாரித்து, அந்த விவரங்களை ஊழல் தடுப்புத் துறையிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தி, ஊழல் தடுப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.