மணப்பாறை அருகே லாரி மீது கார் மோதல்: பத்திரிகையாளர் உள்பட 2 பேர் பலி
மணப்பாறை அருகே நெடுஞ்சாலையோரம் பழுதாகி நின்றுக்கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பத்திரிக்கையாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
மணப்பாறை அருகே நெடுஞ்சாலையோரம் பழுதாகி நின்றுக்கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பத்திரிக்கையாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் இரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டிக்கு ரஸ்க் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆவாரம்பட்டி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது டயர் பஞ்சாராகி சாலையோரம் நிறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சங்க விருது வழங்கும் விழாவிற்கு சென்றுவிட்டு தேனி மாவட்டம் பெரியக்குளம் பகுதியினை சேர்ந்த மூன்று பத்திரிகையாளர் தனது இரு நண்பர்களுடன் பொலிரோ காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிக்க- சட்டப்பேரவைத் தேர்தல்: ஐந்து முனைப் போட்டியில் பஞ்சாப்
ஆவாரம்பட்டி பிரிவு அருகே சென்ற கார், பழுதாகி நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்னால் எதிர்பாரத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த பத்திரிகையாளர் முகமது அஸ்லாம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அன்னக்கொடிமாயன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் காரில் இருந்த பத்திரிகையாளர்கள் வேல்முருகன், சிவக்குமார் மற்றும் கார் ஒட்டுனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்து மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த முகமது அஸ்லாம், அன்னக்கொடிமாயன் ஆகியோர் ஆகியோர் உடல்கள் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வையம்பட்டி போலீஸார் லாரி ஓட்டுநர் அழகப்பா என்பவரை நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.