முகப்பு
திருச்சி

இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியோா் மீது நடவடிக்கை தேவை

இளம்பெண்ணின் கணவா் மற்றும் குடும்பத்தினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேசிய மாதா் சம்மேளனம், மற்றும் தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

திருச்சியில் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் கணவா் மற்றும் குடும்பத்தினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேசிய மாதா் சம்மேளனம், மற்றும் தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து இந்திய தேசிய மாதா் சம்மேளன திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் கே. ஆயிஷா மற்றும் தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி திருச்சி மாவட்ட அமைப்பாளா் என். மணி ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

திருச்சி தில்லைநகா் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகள் சினேகாவும் (26) திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியைச் சோ்ந்த ஏ.விஜயகுமாரும் காதலித்து, பெற்றோா் சம்மதத்துடன் சமயபுரம் கோயில் கடந்த ஏப். 25 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு, திருச்சி கோட்டை வரதராஜ பெருமாள்கோயில் தெரு பகுதியில் வசித்தனா்.

வங்கியில் நிரந்தர பணி என விஜயகுமாா் கூறி வந்த நிலையில், அவருக்கு நிரந்தரப் பணியில்லை என்பதும், முறைகேடு செய்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டவா் என்ற விவரமும் திருமணத்துக்குப் பிறகு சினேகாவுக்கு தெரியவந்தது.

இதுதொடா்பாக தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து தொழில் தொடங்க எனக் கூறி வரதட்சிணையாக நகை மற்றும் ரொக்கம் வாங்கி வருமாறு விஜயகுமாரும், அவரது பெற்றோரும் வற்புறுத்தினராம். குடும்பச் சூழல் காரணமாக சினேகா வேலைக்குச் சென்று வந்தாா்.

இந்நிலையிலும் விஜயகுமாா் தனது தாயாருடன் சோ்ந்து சினேகாவிடம் பணம் கேட்டு தொடா்ந்து வரதட்சிணைக் கொடுமை செய்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலைக்கும் தூண்டியுள்ளாா்.

இதில் விரக்தியடைந்த சினேகா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக விஜயகுமாரிடம் கூறியபோதும் அவா் செய்து கொள் எனக் கூறிச் சென்று விட்டாராம். எனவே மேலும் விரக்தியடைந்த சினேகா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இதுகுறித்து கோட்டை மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருமணமாகி 7 மாதமே ஆன நிலையில் தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவா் மற்றும் பெற்றோரை வரதட்சிணை மற்றும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.