மணப்பாறை அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
மதுரை மாவட்டம், சமயநல்லூா் சத்தியம் நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன்.
ஜோதிடரான இவா், மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை நித்திஷ் ஆகியோருடன் மணப்பாறை சமுத்திரத்திலுள்ள உறவினரை திங்கள்கிழமை சந்தித்துவிட்டு, மதுரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
திருச்சி- திண்டுக்கல் சாலையில் வெள்ளைக்கல் பகுதி காய்கறிச் சந்தைக்கு அருகில் சாலையைக் கடக்க முயன்ற போது, வாழைக்காய் ஏற்றிச் சென்ற சரக்கு வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் நித்திஷ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, வேன் ஓட்டுநரான தேனூா் பாரதியை(23) கைது செய்து விசாரிக்கின்றனா்.