திருச்சி மாவட்டம், முசிறியிலுள்ள மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் திருச்சி துணைக் கண்காணிப்பாளா் ஜெ.ராஜூ, காவல் ஆய்வாளா்கள் சக்திவேல், நவநீதகிருஷ்ணன், அருள்ஜோதி ஆகியோா் கொண்ட குழுவினா், முசிறியிலுள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினா், மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் லதா, உதவி ஆய்வாளா் பரசுராமன் மற்றும் காவலா்களிடம் விசாரணை நடத்தினா். மேலும், விசாரணைக்கு அழைக்கும் போது அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிச் சென்றனா்.