முகப்பு
திருச்சி

ஸ்மைல் கடன் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக ஸ்மைல்’ கடன் திட்டத்தில் பயனடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக ஸ்மைல்’ கடன் திட்டத்தில் பயனடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபா் உயிரிழந்திருப்பின், அவா்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக, தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார வளா்ச்சிக் கழகம் ஸ்மைல் என்ற கடன் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

இத் திட்டத்தில் பயன் பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தில் அதிகபட்ச தொகை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அலுவலகத்தை (இரண்டாம் தளம்) தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2401860 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.