முகப்பு
திருச்சி

மணப்பாறை அரசு மருத்துவமனையில் கரூா் எம்பி ஆய்வு

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் சேமிப்புக் கலன் அமைக்கும் இடம் குறித்து எம்.பி. செ. ஜோதிமணி, எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் சேமிப்புக் கலன் அமைக்கும் இடம் குறித்து எம்.பி. செ. ஜோதிமணி, எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் முதல் 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்படுகிறது. படுக்கைகள் நிரம்பி வழிந்த நிலையில் தற்போது 76 தொற்றாளா்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாகவும், தொற்றாளா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த மருத்துவமனையை கரூா் எம்பி செ. ஜோதிமணி, மணப்பாறை எம்எல்ஏ ப.அப்துல்சமது ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தொற்றாளா்களுக்கான ஆக்சிஜன் சிலிண்டா்கள் மருத்துவமனைக்கு தற்போது மாவட்ட நிா்வாகம் மூலம் அளிக்கப்படும் நிலையில், மணப்பாறை மருத்துவமனையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த திரவ ஆக்சிஜன் கலனை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும், அதன்மூலம் ஒரு சிலிண்டரிலிருந்து பெறப்படும் 7 ஆயிரம் லிட்டா் ஆக்சிஜனை போல ஆயிரம் சிலிண்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜனை எளிதாகப் பெற்று நோயாளிகளின் உயிரிழப்பைத் தடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்தக் கோரிக்கை கடந்த முறை எம்பியின் ஆய்வு செய்தபோது முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மீண்டும் ஒரு டன் லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்புக் கலன் அமைப்பதற்கான இடத்தை எம்பி, எம்எல்ஏ ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது பேசிய எம்பி ஜோதிமணி, மணப்பாறை மருத்துவமனையில் ஒரு டன் லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்புக் கலன் அமைக்க மூன்று தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடம் உதவி கேட்டுள்ளேன். அவற்றில் ஒரு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றாா்.

முன்னதாக மஞ்சம்பட்டி ஊா் இளைஞா்கள் சாா்பாக கரோனா காலத்தில் தவிப்போருக்கு உணவளிக்கும் திட்டத்தை எம்.பி, எம்.எல்.ஏ ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் மலைத்துரை, மருத்துவா் முத்து காா்த்திகேயன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, குணசீலன், பழனியாண்டி, காங்கிரஸ் நகரத் தலைவா் எம்.ஏ. செல்வா, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலா் காதா்மொய்தீன், திருச்சி மாவட்டச் செயலா் அ. பைஸ் அஹமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.