முகப்பு
திருச்சி

திருச்சி ‌அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளான 544 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை

கரோனா பாதிப்புக்குள்ளான 544 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்து  திருச்சி அரசு மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

கரோனா பாதிப்புக்குள்ளான 544 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்து  திருச்சி அரசு மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது.

இதுகுறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா சனிக்கிழமை அளித்த பேட்டி: திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களில் 544 கர்ப்பிணிகள் கரோனா பாதிப்புடன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த 544 பேரில் 390 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. 154 பேருக்கு சுகப்பிரசவம் ‌ஆகி உள்ளது. இந்த 544 பிரசவத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் கரோனா தொற்று ஏற்படாமல் மருத்துவர்களால் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

தாய்மார்களுக்கு கரோனா இருந்த போதும் பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் மிகுந்த ஜாக்கிரதையாக செயல்பட்டு பாதுகாத்தோம். இருப்பினும் பார்வையாளர்களின் தொல்லையால் 3 பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டும் தொற்று ஏற்பட்டது. அதிலும் போராடி 3 குழந்தைகளையும் குணமாக்கினோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியை எங்களுக்கு தந்தது. அது மட்டும் அல்லாமல் கரோனா பரவல் அதிகமாக இருந்த கடந்த 3 மாதங்களில் 52 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.

இதில் 11 பச்சிளம் குழந்தைகள் என்பது சிறப்பு. அனைத்து குழந்தைகளும் நலமுடன் வீடு திரும்பினர். விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதை பற்றி கவலைப்படாமல் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர். இவ்வாறாக மூளையில் ரத்த கசிவு, மூளையில் கட்டி, கேன்சர் கட்டி ஆகிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 3 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். 

ஒரு வாரத்திற்கு முன்பு நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவருக்கு கரோனா பாதிப்பு அதிகளவில் இருந்த நிலையிலும், கல்லீரல் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என்று அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.