ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது: ஆஸி. பயிற்சியாளர்
ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய அணி என இரண்டு நிர்வாகங்களிடமிருந்தும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் பந்துவீசாதது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவிடம் போட்டி நிறைவடைந்த பிறகு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஹானே, இந்தக் கேள்வியை நீங்கள் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம்தான் கேட்க வேண்டும் என்றார். அதன் பின், கேமரூன் கிரீன் காயம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்தது.
இந்த நிலையில், ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய அணி என இரண்டு நிர்வாகங்களிடமிருந்தும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் பந்துவீச்சிலும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆஸ்திரேலிய அணியிலும் உள்ளது. இந்த எதிர்பார்ப்புகளை நியாயமற்றது எனக் கூற முடியாது. ஆல்ரவுண்டராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கேமரூன் கிரீன் அவரது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கண்டிப்பாக இருக்கும் என்றார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.