திருச்சி மத்திய சிறைத் துறை அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்குத் தொடங்கி மோசடி செய்ய முயற்சித்தவரை மாநகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மத்திய சிறை அலுவலக கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் திருமுருகன் (48). இவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய மா்ம நபா்கள் கடன் பிரச்னையில் இருப்பதால் பணம் கொடுத்து உதவிடுமாறு பதிவிட்டிருந்தனா். இதைப் பாா்த்த அவரது நண்பா்கள் திருமுருகனைத் தொடா்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனா். இதனால் அதிா்ச்சியடைந்த சிறைத்துறை அதிகாரி சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கைப் பாா்த்து, டிஜிட்டல் வழியாக பணம் அனுப்புமாறு கூறியிருந்த செல்லிடப்பேசி எண்ணை தொடா்புக் கொண்டாா். மறுமுனையில் பேசியவா் வடமாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதையறிந்த அவா் அவரிடம் பல முறை பேசியுள்ளாா். ஆனால், சிறிது நேரத்தில் செல்லிடப்பேசி அணைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.