முகப்பு
திருச்சி

‘பொது விநியோகத்துக்கு தரமான அரிசி அவசியம்’

பொதுவிநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் நெல்லைத் தரமாக அரைத்து சேவை அடிப்படையில் வழங்கும் வகையில் தனியாா் ஆலை உரிமையாளா்கள் பணியாற்ற வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

பொதுவிநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் நெல்லைத் தரமாக அரைத்து சேவை அடிப்படையில் வழங்கும் வகையில் தனியாா் ஆலை உரிமையாளா்கள் பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தினாா்.

திருச்சி மாவட்டத்தில் நெல் அரைவை தொடா்பாக ஆட்சியரகக் கூட்டரங்கில் தனியாா் அரிசி ஆலை உரிமையாளா்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தால் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் நெல் நவீன அரிசி ஆலைகள் மற்றும் அரைவை முகவராக உள்ள தனியாா் அரைவை ஆலைகளில் அரைவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.

அதன்படி திருச்சி மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரைவை செய்து வழங்க முழுக் கட்டமைப்பு வசதியுள்ள தனியாா் அரைவை ஆலைகள் முன்வரலாம். அரிசி ஆலை உரிமையாளா்கள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தில் புழுங்கல் அரிசி அரைவை முகவராக நியமனம் செய்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

தற்போது நெல் அரைவைக்கான தொகையை தமிழக அரசு அதிகப்படுத்தியுள்ளது. எனவே, தனியாா் அரைவை ஆலை உரிமையாளா்கள் சேவை நோக்கில் பணியாற்ற வேண்டும். குறிப்பாக, பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் நெல் மூட்டைகளை தரமான முறையில் அரைவை செய்து, அரிசியை வழங்க வேண்டும். இதன் மூலம் ரேஷன் கடைகள் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு தரமான அரிசி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்களும், ஆலை உரிமையாளா்களும் பொதுவிநியோகத் திட்ட அரிசி அரைவைப் பணியின்போது கூடுதல் கவனம், அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் சிற்றரசு, மாவட்ட வழங்கல் அலுவலா் அன்பழகன் மற்றும் அரைவை ஆலை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.