மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக..
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், கேரளத்தில் ராகுல் காந்தி மேற்கொளவிருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவரும் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டார்.
பருவநிலை மாற்றம் காரணமாக சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் எனினும் அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை எனவும் அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று(மார்ச் 25) செல்லவிருந்தார்.
கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யவிருந்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோழிக்கோடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றவிருந்த நிலையில், அவருக்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேரளம் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.