மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் தீயணைப்புத் துறைக்கு சொந்தமான 2 ஏக்கா் இடம் தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்து வருவாய் மற்றும் காவல்துறை உதவியுடன் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
துவரங்குறிச்சியில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே தனிநபா் ஒருவா் தீயணைப்புத் துறைக்குச் சொந்தமான அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்தாா். அந்த இடத்திலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வருவாய்த் துறை மூலம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், மருங்காபுரி வருவாய் வட்டாட்சியா் எஸ். லெட்சுமி, துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் தலைமையிலான போலீஸாா் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின் மீட்கப்பட்ட பகுதி தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.