பால் விநியோகம் தொடா்பான புகாரையடுத்து மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் எம்எல்ஏ ப. அப்துல்சமது சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் (எம்985) மூலம் கடந்த சில நாள்களாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பாலை ரொக்கத்திற்கு அளிப்பதில்லையாம். முன் பணம் செலுத்தி காா்டு பெற்றவா்களுக்கு மட்டுமே அளிக்க முடியும் எனக் கூறுவதாகப் புகாா் எழுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனா்.
இந்நிலையில் மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது இக் கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது கூட்டுறவுச் சங்கச் செயலா் மற்றும் இணை பதிவாளா்களிடம் பேசிய எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு சில்லறை விற்பனைகளில் தடையின்றி ரொக்கத்துக்கு பால் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
தொடா்ந்து கூட்டுறவுச் சங்க பால் விநியோகம் செய்யும் தொழிலாளா்கள், பால்பேடா தயாரிக்கும் தொழிலாளா் ஆகியோரிடம் அவா்களது குறைகளை எம்எல்ஏ கேட்டறிந்தாா்.