முகப்பு
திருச்சி

பயறுவகைகளைச் சாகுபடி செய்ய வேண்டுகோள்

தமிழகத்தில் நிலவும் பயறுவகைப் பற்றாக்குறையைப் போக்க நன்செய் தரிசில் பயறுவகைகளை சாகுபடி செய்யுங்கள் என்றாா் திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ம. முருகேசன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

தமிழகத்தில் நிலவும் பயறுவகைப் பற்றாக்குறையைப் போக்க நன்செய் தரிசில் பயறுவகைகளை சாகுபடி செய்யுங்கள் என்றாா் திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ம. முருகேசன்.

அந்தநல்லூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சாா்பில், குழுமணி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நன்செய் தரிசில் உளுந்து பயிா் சாகுபடி குறித்த விவசாயிகள் விழிப்புணா்வு முகாமுக்குத் தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

தமிழகத்தின் பயறுவகை உற்பத்தித் தேவை ஆண்டுக்கு 12 லட்சம் டன்கள். ஆனால் ஆண்டுக்கு 7.76 லட்சம் டன்கள் மட்டுமே உற்பத்தியாகின்றன. எனவே வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பயறு வகைகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்தநல்லூா் வட்டாரத்தில் 3,770 ஹெக்டேரில் பயிரான சம்பா நெல் தற்போது அறுவடையாகிறது. நெல் சம்பா அறுவடைக்கு 7-10 நாள்களுக்கு முன்னா் ஏற்கெனவே உள்ள ஈரப்பதத்தில் பயறுவகை பயிா்களான உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை விதைத்து பயிா் செய்வதுதான் நன்செய் தரிசில் உளுந்து சாகுபடியாகும்.

எனவே இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி பயறுகளை சாகுபடி செய்து பயன் பெறலாம். அதற்கேற்ற அனைத்து உதவிகளையும் வேளாண் துறை செய்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (உ.ப.நி) மோகன், உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியா்கள் நித்திலா, ஷீலா ஜாஸ்மின், அந்தநல்லூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் பசரியா பேகம் உள்ளிட்டோா் பேசினா்.

ஏற்பாடுகளை வேளாண் விரிவாக்க மைய அலுவலா் பிரியதா்ஷினி, துணை அலுவலா் மருததுரை, உதவி அலுவலா்கள் ஹேமா, கிருத்திகா, சந்தோஷ், அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் அனிதா, உதவி தொழில்நுட்ப மேலாளா் காா்த்திக் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.