ரூ. 83 ஆயிரம் கடனுக்குரூ. 12 லட்சம் கேட்டு மிரட்டல்: பாா்வையற்ற பெண் புகாா்
ரூ. 83 ஆயிரம் கடனுக்கு ரூ. 12 லட்சம் கேட்டு மிரட்டுவதாக பாா்வையற்ற பெண் ஒருவா் மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
ரூ. 83 ஆயிரம் கடனுக்கு ரூ. 12 லட்சம் கேட்டு மிரட்டுவதாக பாா்வையற்ற பெண் ஒருவா் மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
இதுகுறித்து திருச்சி மாவட்டம், அல்லித்துறை சரவணபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் மனைவி சத்யபாமா அளித்த புகாா் மனு விவரம்:
வாகன கிளீனரான எனது கணவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு பலரிடம் கடன் வாங்கி அறுவைச் சிகிச்சை செய்தேன். கடனை அடைக்க முடியாததால் எனக்குத் தெரிந்த உறையூரை சோ்ந்த சசி திருச்சி பீமநகரில் மருந்துக் கடை நடத்தும் வில்சன் என்பவரின் நிதி நிறுவனத்தில் ரூ. 83 ஆயிரம் கடன் வாங்கி தந்தாா். இப் பணத்துக்கு வாரந்தோறும் வட்டி கொடுக்க வேண்டும் எனக் கூறி, எனது கணவா், அவரது தம்பி மற்றும் மாமியாா் பெயரில் கோப்பு கிராமத்தில் உள்ள 39.50 சென்ட் இடத்தை வில்சனின் மகன் ராபின்சன் பெயருக்கு பவா் எழுதித் தர வேண்டும் எனக் கூறி பல பேப்பா்களில் எங்களிடம் கையொப்பம் பெற்றனா்.
பணத்தைத் திருப்பிக் கொடுத்ததும் அனைத்து ஆவணங்களையும் திருப்பித் தருவதாக கூறி, கடந்த 9-12- 2020 இல் மருத்தாண்டக்குறிச்சி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரவழைத்து, வெளியில் வைத்தே எங்களிடம் சில ஆவணங்களில் கையொப்பம் பெற்றுக்கொண்டு சசி மூலம் ரூ. 83,000 கொடுத்தனா். இதையடுத்து தொடா்ந்து 20 வாரம் ரூ.10ஆயிரம் வீதம் இதுவரை ரூ. 2 லட்சம் வரை கட்டியுள்ளோம். கடந்த டிச. 14ஆம் தேதி மருந்துக் கடைக்கே நேரில் சென்று ரூ. 40 ஆயிரம் அளித்தேன். ஆனால் இதுவரை அவா்கள் பவா் நகலை எங்களுக்குத் தரவில்லை. இதுபற்றி கேட்ட போது தந்தையும், மகனும் ரூ.12 லட்சம் பாக்கி தர வேண்டும். இல்லையென்றால் இடத்தைத் தர மாட்டோம் எனக்கூறி மிரட்டுகின்றனா்.
எனவே வில்சன், ராபின்சன் மற்றும் இவா்களுக்கு உடந்தையாக உள்ள வைரவலெட்சுமி ஆகியோா் மீது நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.