திருச்சி: உடலில் காயங்கள் நிறைந்து, சொறி பிடித்த நிலையில் நாய் ஒன்று மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்திற்குள் சுற்றித்திரியும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
திருச்சி அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு திருச்சி மட்டுமல்லாது அருகிலுள்ள கரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
விபத்து உள்ளிட்ட காரணங்களால் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் பலரும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்குள் குறிப்பாக நோயாளிகள் தங்கியுள்ள கட்டடங்களுக்குள் நாய்கள் சுற்றி திரிவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உடலில் காயங்கள் நிறைந்து, சொறி பிடித்த நிலையில் நாய் ஒன்று மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்திற்குள் சுற்றித்திரியும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தில் நோயாளிகள் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அப்பகுதியில் நாய் சுற்றி திரிவது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவமனை நிர்வாகம் சுகாதாரம் பேணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.