திருச்சி மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் அதிகரித்துள்ள நாய்கள் தொல்லையை மாநகராட்சி நிா்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என மாநகராட்சியில் மமக புகாா் அளித்துள்ளது.
இதுதொடா்பாக அக் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஏ. ராஜா முகமது தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலரும், 22ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது, தமுமுக மாவட்டச் செயலா் இப்ராகிம், மாவட்டப் பொருளாளா் அஸ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலா் பிா்தவ்ஸ் ஆகியோா் மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதனை புதன்கிழமை சந்தித்து அளித்த மனு:
மாநகரில் தில்லைநகா், உறையூா், புத்தூா், பீமநகா், பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புத்தூா் பகுதியில் வசித்த பெண் நாய் கடித்ததில் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதேபோன்று உறையூா் பகுதியைச் சோ்ந்த சிறுவனும் நாய் கடித்ததில் கை, கால்கள் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பலரும் தொடா்ந்து வலியுறுத்துகின்றனா்.
மாநகராட்சியின் 57 ஆவது வாா்டு உறையூா் கோணக்கரை சாலையிலுள்ள மின் மயான வளாகத்தினுள் புதிதாக கட்டப்பட்டுள்ள தெரு நாய்கள் கருத்தடை மையத்தின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
இதேபோல, சாலைகளில் திரியும் கால்நடைகளாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது தொடா்கிறது. அந்தக் கால்நடைகளைப் பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இல்லையெனில், கால்நடைகளை ஏலம் விட வேண்டும். மேலும், புதைசாக்கடை, குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட மாநகரச் சாலைகளை உடனடியாக புதுப்பித்து புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.