முகப்பு
திருச்சி

திருச்சி: காதலிக்க மறுத்ததால் மாணவி விஷம் கொடுத்து கொலை

திருச்சியில் காதலிக்க மறுத்ததால் மாணவி விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On : 23 மே, 2022 at 1:37 PM
பகிர்:

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புதூரை சேர்ந்தவர் ஆனந்தன் மகள் வித்யா லட்சுமி (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். அவர் பெல் நிறுவனம் அருகே மணியம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு தினமும் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே 17 ஆம் தேதி  வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வித்யாலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் விஷம் இருப்பதை கண்டறிந்தனர். 

இது குறித்து பெல் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று வித்யாலட்சுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

Advertisement

அதில்,  கடந்த ஒரு மாத காலமாக கல்லூரி சென்று வந்தபோது அவரை ஒருவர் பின்தொடர்ந்து வந்ததாகவும், பின்னர் கடந்த மே 11 ஆம் தேதி  கல்லூரி முடிந்துவீட்டுக்கு வந்தபோது, அந்த நபர் தன்னிடம்  வந்து காதலிப்பதாக கூறியதாகவும், ஆனால் அவரை தன்னுடைய செருப்பால் அடித்துள்ளார். பின்னர் மறுநாள் 12 ஆம் தேதி வித்யா லட்சுமி கல்லூரியிலிருந்து வீடு திரும்பியபோது, காதலிப்பதாக கூறிய நபர் மற்றும் மேலும் 2 பேர் சேர்ந்து  வித்யா லெட்சுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகில் உள்ள ஒரு சந்தில் வைத்து,  விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட வித்யா லட்சுமி கடந்த 13 ஆம் தேதியிலிருந்து அரசு மருத்துவமனை உள்பட சில இடங்களில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்துள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெல்  காவல்துறையினர்  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்த நிலையில்,  ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வித்யா லட்சுமி தனியார் மருத்துவமனையில் இருந்து 21 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த வித்யாலட்சுமி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பகலில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் பிடித்து பெல்  காவல்துறையினர்  விசாரணை செய்தால் மட்டுமே வித்யா லட்சுமியின் மரணத்திற்கு உரிய விடை தெரியும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் உடனடியாக தொடர்புடைய 3 பேரையும்  காவல்துறையினர்  கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி,  அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படாத நிலையில், தடியடி நடத்தி  காவல்துறையினர்  அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் சுமார் 45 நிமிடங்கள் தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.