முகப்பு
திருச்சி

மணப்பாறை: மணப்பட்டி தானாமுளைத்த மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

மணப்பாறை அடுத்த மணப்பட்டி ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் 8 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
பகிர்:

மணப்பாறை: மணப்பாறை அடுத்த மணப்பட்டி ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் 8 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர். 8 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பட்டி ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதல், கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பெரிய மணப்பட்டி, சின்ன மணப்பட்டி, கிளவன்பட்டி, பண்ணையார் குளத்துப்பட்டி, குடையகவுண்டம்பட்டி, விராலிகாட்டான்பட்டி மற்றும் நெரிஞ்சிகாளப்பட்டி ஆகிய 8 கிராமங்களின் சார்பில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு வழிபாடு இரவு நடைபெற்றதைத் தொடர்ந்து, சின்ன மணப்பட்டி முனியப்பன் ஆலயத்திலிருந்து தாரைதப்பட்டைகளுடன் புறப்பட்ட அலகு குத்தி, அக்னிசட்டி எடுத்து, பால்குட ஊர்வலம் பெரியமணப்பட்டி மாரியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தது.

கிளவன்பட்டி மற்றும் சின்னமணப்பட்டியிலிருந்து மின் அலங்காரத்தில் அம்மன் பவனி வர, வானவேடிக்கைகளுடன் மாவிளக்கு ஏந்தி புறப்பட்ட பெண்கள் செண்டை மேளம், தாரைதப்பட்டைகளுடன் மணப்பட்டி ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதனைத்தொடர்ந்து பெரியமணப்பட்டி ஊர் மாவிளக்கும் ஆலயம் வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து பெரியமணப்பட்டி பிள்ளையார் கோயிலிருந்து பறை இசையுடன் புறப்பட்ட அக்னி சட்டி மற்றும் பால்குட ஊர்வலமும் மாரியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பால்குடங்கள் ஆலயத்திற்கு வந்ததையடுத்து, அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின் கரும்பு தொட்டில், அங்கப்பி ரதட்சணம் ஆகிய நேர்த்திக்கடங்களும் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நாளை செவ்வாய்கிழமை பொங்கல், பெரிய படுகளம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று, இரவு கரகம் களைதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.