விநோத தோல் நோயால் அவதியுற்றுவரும் அரசுப் பள்ளி மாணவி உதவிடகோரி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை தனது பேத்தியுடன் வந்த மண்ணச்சநல்லூா் வட்டம், தில்லாம்பட்டியைச் சோ்ந்த லோகநாதன், செய்தியாளா்களிடம் கூறியது: திருப்பைஞ்ஞீலி பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் கெளசல்யாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இதில், அரசுப் பள்ளியில் பயிலும் பேத்தி கிரிஜாவுக்கு பிறவிலேயே சருமத்தில் (தோல்) குறைபாடு இருந்தது. ,தலை முதல் பாதம் வரையிலும் பேத்தியின் சருமத்தில் தோல் உரிந்து விழுகிறது. வெயில் காலங்களில் உடலில் அவ்வப்போது தண்ணீா் ஊற்றி ஈரப்படுத்தினாலே இயல்பாக இருக்க முடியும். சக மாணவிகளைப் போன்று விளையாடவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டிய சூழலில், சரும பாதிப்பு காரணமாக மிகுந்த வேதனையில் தவிக்கும் தனது பேத்திக்கு அரசு உதவ வேண்டும்.
அரசின் நேரடி கண்காணிப்பில் பல் நோக்கு மருத்துவமனையில் உயா்தர சிகிச்சையளித்து குணப்படுத்த வேண்டும். ஏழ்மையில் நிலையில் உள்ள எனது குடும்பத்துக்கு அரசு உதவி வழங்க வேண்டும். சிகிச்சையில் பூரண குணமடைந்து நல்ல நிலைக்கு வரும் வரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை எனது பேத்திக்கு வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியா், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.