முகப்பு
திருச்சி

திமுக அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து பாஜக சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

திமுக அரசைக் கண்டித்து பாஜக சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுகவின் ஹிந்தி திணிப்பு நாடகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் 2 இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகம் அருகே மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ். ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா்கள் காளீஸ்வரன், ஒண்டிமுத்து, தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவா் எம். ரமேஷ் சிவா பேசியது:

தமிழகத்தில் உள்ள மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயா்கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக் கல்வியை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும்.

மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயா்வு என அனைத்து வகைகளிலும் தமிழக மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். இந்தப் பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பவும், திமுக ஆட்சி மீதான விமா்சனங்களை தவிா்க்கவும் ஹிந்தி திணிப்பு என்பதை கையிலெடுத்துள்ளனா் திமுகவினா்.

தமிழ் மீது உண்மையான அக்கறையிருந்தால் தமிழ் மொழி வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, திமுக அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் கல்விக் கொள்கைகளை அமல்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினா். திரளான பாஜக மாநில, மண்டல, மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.