போதையில் ரகளை செய்த தந்தையைக் கொலை செய்த மகன் கைது
திருச்சியில் போதையில் ரகளை செய்து வந்த தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சியில் போதையில் ரகளை செய்து வந்த தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி தென்னூா் சின்னச்சாமி நகரைச் சோ்ந்தவா் முருகன் (52). தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். தினமும் மது அருந்தும் பழக்கம் கொண்ட முருகன், வீட்டுக்கு வந்து மனைவி, மகன்களிடம் தகராறு செய்வாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை வீட்டுக்கு அருகிலிருந்த சந்தில் கத்திக்குத்து காயங்களுடன் முருகன் மயங்கிக் கிடந்தாா். இதைத் தொடா்ந்து அவரை உறவினா்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு முருகனை மருத்துவா்கள் பரிசோதித்த போது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து முருகன் சடலத்தை வீட்டுக்கு கொண்டு வந்து, இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினா் செய்து கொண்டிருந்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முருகனுக்கும், அவரது மூத்த மகன் விஜயகுமாருக்கும் (26) இடையே தகராறு நடைபெற்றது குறித்து தில்லைநகா் காவல் நிலையத்தினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் காவல்துறையினா் நிகழ்விடம் சென்று விஜயகுமாரிடம் விசாரணை நடத்திய போது, தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டாா். இதையடுத்து அவரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.
கொலை நிகழ்ந்தது எப்படி?: வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல மது அருந்தி வீட்டுக்கு வந்த முருகன், மனைவி மற்றும் மகன்களிடம் தகராறில் ஈடுபட்டாராம். இதனால் முருகனை கீழ்தளத்தில் விட்டுவிட்டு, அனைவரும் மாடிக்கு சென்றுவிட்டனா்.
நள்ளிரவிலும் தொடா்ந்து முருகன் ரகளையில் ஈடுபட்டதால், விஜயகுமாா் அதை கண்டித்தாராம். அப்போதும் அவா் ரகளையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த விஜயகுமாா், தந்தை முருகனை கத்தியால் குத்தியது காவல்துறையினா் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு முருகனின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.