எல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
ஈரான் போர் எதிரொலி: ஆசிய நாடுகளில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு!
எல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலியாக பல்வேறு நாடுகளிலும் நிலக்கரியை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக, ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை தற்காலிக மூடல் காரணமாக கடந்த இரு வாரங்களாக பாரசீக வளைகுடா பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் பல நாடுகளின் சரக்கு கப்பல்களும் ஸ்தம்பித்து நின்றன.
உலகளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒருபங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெற்று வந்ததால், ஈரான் போர் ஏற்படுத்திய தாக்கம் சர்வதேச சமூகத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.
இந்நிலையில், இறக்குமதியாகும் எரிபொருள் பயன்பாட்டை அதிகம் சார்ந்திருக்கும் ஆசியாவின் பல நாடுகளிலும் ஈரான் போரால் இப்போது எல்என்ஜி உள்ளிட்ட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவின் திரவ வடிவமான எல்என்ஜி, எரிபொருள் பயன்பாட்டில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், அதிகரிக்கும் பாதிப்பை கருத்திற்கொண்டு ஆசியாவெங்கிலும் எல்என்ஜி ஏற்றுமதியை தாங்கள் விரிவுபடுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே, தட்டுப்பாட்டை ஈடுகட்ட இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளில் எல்என்ஜி-க்கு மாற்றாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. தென் கொரியாவில் நிலக்கரி பயன்படுத்தி மின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ், வியத்நாமில் நிலக்கரி பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிலக்கரி தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும் என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே நெடுங்கால தீர்வாக அமையுமென்றும் இத்துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் திகழும் இந்தியாவில் கோடைகாலத்தில் மின் தேவையின் அளவீடு உச்சமாக சுமார் 270 கிகாவாட்ஸ் வரை செல்லும்போது நிலக்கரி பயன்பாட்டைத் தவிர்க்காமல் மாற்று வழிகள் இல்லை என்று கூறப்படுகிறது. சுமார் 270 கிகாவாட்ஸ் என்பது ஸ்பெயின் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவில் சுமார் 3 மாதங்களுக்குப் போதுமான நிலக்கரி இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.