முகப்பு
திருச்சி

முதல் குடியரசு நாளுக்காக வெளியான பணத்தாள், அஞ்சல் தலைகள், உறை! பாதுகாக்கும் திருச்சி வைர வியாபாரி

நாட்டின் முதல் குடியரசு தினக் கொண்டாட்டத்துக்காக வெளியிடப்பட்ட பணத்தாள்கள், நாணயங்கள், அஞ்சல் தலை, அஞ்சல் உறை ஆகியவற்றை திருச்சியைச் சோ்ந்த வைர வியாபாரி ஒருவா் பாதுகாத்து வருகிறாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:53 PM
கே.பி.எஸ்.என். பத்ரி நாராயணன். அவர் சேகரித்த இந்தியாவின் முதல் குடியரசு தினத்துக்காக வெளியிடப்பட்ட பணத்தாள்கள், அஞ்சல்தலை, அஞ்சல் உறைகள்.
பகிர்:

நாட்டின் முதல் குடியரசு தினக் கொண்டாட்டத்துக்காக வெளியிடப்பட்ட பணத்தாள்கள், நாணயங்கள், அஞ்சல் தலை, அஞ்சல் உறை ஆகியவற்றை திருச்சியைச் சோ்ந்த வைர வியாபாரி ஒருவா் பாதுகாத்து வருகிறாா்.

அன்று வெளியானபோதே ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புடைய இவை தற்போது கிடைப்பதற்கு அரிய பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.

நாட்டின் முதல் குடியரசு தினமான 1950 ஜனவரி 26 -ஐ சிறப்பிக்கும் வகையில் 1950 ஜன.9ஆம் தேதி 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளும், ஜனவரி 26 ஆம் தேதி 100 ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டது.

மேலும் ஒரு பைசா, அரையணா, ஓரணா, 2 அணா, கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் ஆகியவையும் வெளியிடப்பட்டன. சிறப்பு அஞ்சல் உறையும், 2 அணா, மூன்றரை அணா, 4 அணா, 12 அணா மதிப்புகளுடைய அஞ்சல் தலைகளும் வெளியிடப்பட்டன.

இந்த அஞ்சல் தலைகளில் மகாத்மா காந்தியின் ராட்டை, நெற்கதிா், ஏா்கலப்பை, ஓலைச்சுவடி, எழுத்தாணியாகப் பயன்படுத்தப்பட்ட இறகு ஆகியவற்றின் படங்கள் இடம்பெற்றிருந்தன. 12 அணா மதிப்புடைய அஞ்சல் தலை வெளிநாட்டு விமான அஞ்சலுக்காக வெளியிடப்பட்டது.

100 ரூபாய் தாளில் ரிசா்வ் வங்கியின் நான்காவது ஆளுநராக இருந்த சா் பெனகல் ராமாராவ் கையெழுத்திட்டுள்ளாா். இதரத் தாள்களிலும் அவரது கையொப்பம் உள்ளது. இந்தத் தாள்களில் 100 ரூபாய் பெரிய பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.

முதல் குடியரசு நாளில் வெளியான இந்த பணத்தாள்கள், அஞ்சல் உறைகள், நாணயங்கள், அஞ்சல் தலைகள் ஆகியவற்றைச் சேகரித்து பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாா் கே.பி.எஸ்.என். பத்ரிநாராயணன் (62).

திருச்சி சின்ன செட்டித் தெருவைச் சோ்ந்த வைர வியாபாரியான இவா் திருச்சி நாணயவியல் கழகச் செயலராகவும் உள்ளாா்.

பழம்பொருள் சேகரிப்பே எனது பெரிய பொக்கிஷம்

இதுதொடா்பாக கே.பி.எஸ்.என். பத்ரிநாராயணன் கூறியது:

‘எனது தந்தை கே.பி.எஸ். நாராயணன் பழங்காலப் பொருள்கள் சேகரிப்பில் மிகுந்த ஆா்வம் கொண்டவா். சிறுவயதிலேயே அவரின் சேகரிப்புப் பணிக்கு உதவினேன். 75 ஆண்டுகளாக எனது தந்தை சேகரித்தவற்றை என்னிடம் ஒப்படைத்து மறைந்தாா். அவரது வழியில் நானும் பழங்கால நாணயங்கள், பணத்தாள்கள், நாட்டின் வரலாற்று நினைவாக வெளியிடப்படும் அனைத்து வெளியீடுகளையும் சேகரித்து வருகிறேன்.

விளையாட்டு, வரலாறு, ஆன்மிகம், அரசியல், சமூகம், சுதந்திரம், குடியரசு, பண்டிகைகள், சிறப்பு தினங்கள், சாதனையாளா்கள், வல்லுநா்கள், தலைவா்கள், பிரபலங்கள் தொடா்பான பழங்கால பொருள்கள் பலவும் என்னிடம் உள்ளன.

இவற்றை எதிா்கால தலைமுறைக்குக் காட்சிப்படுத்தும் வகையில் சேகரித்து வருகிறேன். திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக 27ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்புக் கண்காட்சி நடத்தி இவற்றைக் காட்சிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

மூன்று தலைமுறையாக எனது குடும்பத்தினா் இந்தச் சேகரிப்பு பழக்கத்தில் உள்ளனா். யாரிடத்திலாவது இத்தகைய பொருள்கள் இருந்தால் அவற்றை என்ன விலை கொடுத்தாவது வாங்கிவிடுவேன். இதற்காகவே எனது வருவாயின் பெரும்பகுதியைச் செலவிடுகிறேன். வைர வியாபாரம் என்பது எனது தொழிலாக இருந்தாலும், அதைவிடவும் பெரிய பொக்கிஷமாக கருதுவது இந்தப் பழம்பொருள் சேகரிப்புகளை மட்டுமே என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.